வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆகும் “ஸ்லம் டாக் மில்லினியர்” விகாஸ் ஸ்வரூப்!
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளராக "ஸ்லம் டாக் மில்லினியர்" கதையினை எழுதிய எழுத்தாளர் விகாஸ் ஸ்வரூப் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளராக உள்ள சையது அக்பருதீன் இந்திய - ஆப்ரிக்க அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்க உள்ளார்.
இதையடுத்து, அக்பருதீனுக்கு பதிலாக விகாஸ் ஸ்வரூப் புதிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளராக ஏப்ரல் மாதம் பதவியேற்கிறார்.
பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டுநாடு திரும்பிய பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
விகாஸ் ஸ்வரூப் ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லினியர்'' என்ற திரைப்படத்தின் கதைக்கு சொந்தக்கார். இவர் எழுதிய "க்யூ அன்ட் ஏ '' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது அப்படம்.
இவர் 1986 ஆம் ஆண்டின் ஐ.எப்.எஸ் கேடர் ஆவார். தற்போது வெளியுறவுத்துறையில் ஐ.நா.விற்கான அரசியல் பிரிவின் இணை செயலராக உள்ளார்.