பி.பி.எப், பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட பலனாளிகளே.. ஃபைனலி உங்களுக்கு ஒரு நல்ல சேதி
டெல்லி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி, மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி என்பது வரிசையாக குறைக்கப்பட்டு கொண்டே வந்த நிலையில் இப்போது வட்டி விகிதம் சற்று உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது, இது 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வட்டி வழங்கப்படும்.
தொழிலாளர் சேமநல நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டி விகிதம் என்பது தற்போதுள்ள 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திர வட்டி 7.3 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி, அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.