குடும்ப கட்டுப்பாடு செய்தால் ராஜஸ்தானில் என்ன பரிசு தெரியுமா?
ஜலாவார்: ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோருக்கு அம்மாநில அரசு சிறப்பு பரிசு வழங்கி வருகிறது.
உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி சீனாவின் மக்கள் தொகையினை முந்தி இந்தியா விரவில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து 2061-ம் ஆண்டு வரை வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு, 4ஜி ஸ்மார்ட்ஃபோன் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட 200 ஆண்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்களும், 250 பெண்களுக்கு புடவையும் ராண்டம் முறையில் ராஜஸ்தான் அரசு வழங்கியுள்ளது.
மேலும், அரசின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் ஆண்களுக்கு 2000 ரூபாயும், பெண்களுக்கு 1400 ரூபாயும் வழங்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் மாவட்டம் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதில் அம்மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதில் ஜலவார் மாவட்டம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஊக்கத்தொகையும் பரிசு பொருட்களும் கொடுக்கப்படுவதாலேயே இம்மாவட்டத்தில் உள்ள ஆண்களும் பலர் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.