மும்பை புறநகர் ரயில் கூட்ட நெரிசலில் தவறி விழுந்த இளைஞர் பரிதாப பலி!
மும்பை: மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக் கொண்ட வந்த இளைஞர் ஒருவர் பிடிமானம் இல்லாமல் தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
விசாரணையில் அந்த இளைஞர் தீம்பிவில்லி பகுதியை சேர்ந்த பவேஷ் என்பதும், சிஎஸ்டியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு தினசரி ரயிலில் பயணம் செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பவேஷ் தவறி விழும் காட்சியை ரயிலில் பயணம் செய்த சக பயணி ஒருவர் தனது செல்பேசியில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், ஒருவர் உயிரிழக்கும் நிலையில் கூட அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதா என்று எதிர்ப்புகளும் பரவி வருகின்றன.
மும்பை புறநகர் ரயில்கள் எப்போதுமே கூட்டமாக இருக்கும். அதுவும் காலை அலுவலக நேரங்களில் ஒரு சிறிய இடத்தில் 8 பேர் நின்று கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவிற்கான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.