நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து: 5 மாலுமிகள் படுகாயம், 2 அதிகாரிகள் நிலை என்ன?
மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புகை மூண்டது. இதனால் 5 மாலுமிகள் சுயநினைவை இழந்தனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் மும்பை துறைமுகம் அருகே சென்றபோது திடீர் என்று கப்பலில் புகை மூண்டது. இதையடுத்து கப்பல் மும்பை கடற்கரைக்கு வந்தது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 5 மாலுமிகள் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.
அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மும்பையில் உள்ள ஐ.என்.எஸ். அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த கப்பலில் இருந்த 2 அதிகாரிகள் மாயமாகி உள்ளனர்.
கப்பல் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருவதால் அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து மும்பை துறைமுகத்தில் மூழ்கியது. இந்த விபத்தில் 18 மாலுமிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.