இந்தியாவில் அதிகரிக்கும் “ஸ்மோக்கிங்” பெண்கள் எண்ணிக்கை – 20 சதவீதமாக “பகீர்” உயர்வு
டெல்லி: இந்தியாவில் புகைப் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.
அதிகரிக்கும் பெண்கள்:
இந்த நிலையில் இந்தியாவில் புகை பிடிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 2005-06ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 11 தசவீதம் பெண்கள் புகை பிடிப்பது தெரிய வந்தது.
குழந்தைகளுக்கு ஆபத்து:
இவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளி இடங்களில் வைத்து புகை பிடிப்பதாக கூறியிருந்தனர். புகை பிடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நன்கு தெரிந்திருந்தும் புகை பிடிப்பதாக அவர்கள் கூறியதாக ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
கட்டுபடுத்த நடவடிக்கை:
இந்திய இளம் பெண்களிடம் பரவி வரும் புகை பிடிக்கும் மோகத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
20 சதவீதம் பெண்கள்:
சமீபத்தில் எடுத்த புதிய கருத்துக்கணிப்பில் இந்திய பெண்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழப்பும் அதிகம்:
இது பற்றி கருத்து தெரிவித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சோனாலி, ‘‘புகை பிடிப்பதால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது'' என்றார்.
மாரடைப்பால் இறப்பு:
எய்ம்ஸ் மருத்துவமனையின் மற்றொரு டாக்டரான சுதீர் கண்டேல்வால் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் பெண்களுக்கு நுரையீரல் புற்று நோய் என்பதே இருக்காது. அது போல மாரடைப்பால் பெண்கள் உயிரிழப்பதாக கேள்விப்பட இயலாது.
புகை பிடிப்பதே காரணம்:
ஆனால் இப்போது நிறைய பெண்கள் நுரையீரல் புற்று நோய் பாதிப்புடன் வருகிறார்கள். தீவிரமாக விசாரித்தால் அவர்கள் புகை பிடித்தது தெரிய வந்தது'' என்றார்.