அலிகார் பல்கலைக்கழக நூலகத்தில் பெண்களுக்கு “நோ என்ட்ரி” – விளக்கம் கேட்கும் ஸ்மிருதி இரானி!
டெல்லி: அலிகார் பல்கலைக் கழகத்தில் மாணவிகளை நூலகத்தில் அனுமதிக்காததற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இங்குள்ள முக்கிய நூலகத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு இளநிலை மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
நூலகத்தை மொய்க்கும் மாணவர்கள்:
இதுகுறித்து, ‘‘நூலகத்தில் மாணவிகளை அனுமதித்தால் உடனே அங்கு 4 மடங்கு மாணவர்கள் வந்து விடுவார்கள், எனவே மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது'' என்று பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கியுள்ளார்.
விளக்கம் தேவை:
இந்த நிலையில் இந்தத் தடை குறித்து துணை வேந்தர் ஜமீர் உடின் ஷாவிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
மறுக்கப்படும் உரிமைகள்:
டெல்லியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த அவர் பேசுகையில், ‘‘நாடு சுதந்திரம் பெற்ற பின்பு கல்வியும், அரசியலமைப்பு சட்டமும் அனைவருக்கும் ஒன்றுதான் என்கிற நிலையில், பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது வேதனை தருவதாக இருக்கிறது.
மகள்களை அவமதிக்கிறோம்:
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி எங்களுக்கு கிடைத்துள்ள சில தகவல்கள் நமது மகள்களை அவமதிப்பது போல் உள்ளது'' என்று குறிப்பிட்டார்.
துணைவேந்தரின் பதில்:
அமைச்சரின் பேச்சுக்கு துணைவேந்தரும் உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "பல்கலைக்கழகத்தின் மவுலானா ஆசாத் நூலகத்தில் அது தொடங்கப்பட்ட 1960 ஆம் ஆண்டில் இருந்தே வளாகத்திற்கு வெளியே உள்ள மகளிர் கல்லூரியின் இளநிலை மாணவிகள் நூலகத்தை அணுகுவதற்கு போதுமான இட வசதி இல்லை. எனவே இது ஒன்றும் புதிய தடை அல்ல" என்று தெரிவித்துள்ளார்.