ஐ.நா. பொதுவாக்கெடுப்பு- நாடாளுமன்றத்தை அவமதிப்பதா? மமதாவுக்கு ஸ்மிருதி இரானி கண்டனம்
கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர். சி குறித்து ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய மமதா பானர்ஜி, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.
மமதாவின் இக்கருத்து மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மமதா பானர்ஜி தமது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் 13 நாட்களாக தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள்.. வெளியேற அனுமதி மறுப்பு.. அன்புமணி கண்டிப்பு
இந்நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மமதா பானர்ஜியின் இக்கருத்து நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என சாடினார்.
பின்வாங்கிய மமதா
இதனிடையே தாம் பொதுவாக்கெடுப்பு கோரவில்லை என்றும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்றே கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார் மமதா பானர்ஜி. மேலும் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் தமக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் மமதா விளக்கம் அளித்துள்ளார்.