அலிகார் முஸ்லிம் பல்கலை. வளாகம்... சாண்டியுடன் ஸ்மிருதி மோதவில்லை- கேரளா பாஜக
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகம் அமைக்கப்படுவது தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை என்று கேரளா பாஜக முன்னாள் தலைவர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மலப்புரம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கடந்த ஜனவரி மாதம் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது உம்மன் சாண்டியிடம், இந்த பல்கலைக் கழக வளாகத்துக்கு ஒதுக்கிய 300 ஏக்கர் நிலத்தை கேரளா அரசு திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அப்படி ஒரு மோதல் போக்கை உம்மன் சாண்டியிடம் கடைபிடிக்கவில்லை என கூறியிருக்கிறார் கேரளா பாஜகவின் முன்னாள் தலைவர் வி. முரளீதரன்.
மேலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த பல்கலைக் கழக வளாகங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுக்கு சட்டப்பூர்வ அனுமதி எதுவும் இல்லாத நிலையில் மத்திய அரசால் எந்த உதவியுமே செய்ய இயலாது எனவும் கூறியுள்ளார்.