சாலை விபத்தில் காயமுற்ற பெண்ணை காப்பாற்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த விழா ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கு சாலையில் விபத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வித்துரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டட திறப்பு விழாவுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமுற்று சாலையில் கிடந்தார். அவர் சென்ற ஸ்கூட்டர் மீது ஒரு லாரி மோதியதாகத் தெரிகிறது. இதைக்கண்ட ஸ்மிருதி இராணி உடனே தனது காரில் இருந்து இறங்கி அப்பெண்ணை ஆறுதல் படுத்தியதோடு, அருகிலிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
அமைச்சரின் காரை பின்தொடர்ந்து வந்த மாநில முதல்வர் உம்மண் சாண்டியும், காரிலிருந்து இறங்கி நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிந்தார். இதையடுத்து இருவரும் விழாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.