இலாகா மாற்றத்தால் எனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை - ஸ்மிருதி இரானி
டெல்லி: இலாகா மாற்றம் செய்யப்பட்டதால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டதையடுத்து, அவரைப் பற்றிய ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. ஸ்மிருதி ரானிக்கு பதிலாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்மிருதி இரானி, தனது மீதான விமர்சனங்களுக்கு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது செயல்திறன் மீது பிரதமர் நரேந்திரமோடிக்கும், கட்சிக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான், இன்னொரு இலாகாவுக்கு என்னை அமைச்சராக்கியிருக்கிறார். எனது துறை வளர்ச்சிக்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
பிரதமரின் நம்பிக்கையை காக்கும் வகையில் புதிய ஜவுளிக்கொள்கையை மேம்படுத்துவேன்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.