அரசியலமைப்பு சட்டத்தை சரத் யாதவ் உருவாக்கியிருந்தால் பெண்களின் நிலைமை என்னவாயிருக்கும்?: ஸ்மிருதி
டெல்லி: அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் ஐக்கிய ஜனதா தாளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் போன்றவர்கள் இருந்திருந்தால் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் என்பதால் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் 2 நாட்களில் அது தொடர்பான விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த இரண்டு நாட்களும் பாராளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதம் நடந்தது.
அதன்படி ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசினார். அப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் சரத்யாதவை கடுமையாக விமர்சித்து பேசினார். மாநிலங்களவையில் அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து நேற்று பேசிய ஸ்மிருதி ராணி, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பெண்கள் இன்னும் வாக்களிக்கும் உரிமைக்காக போராடி வரும் நிலையில் இந்தியாவில் பிறந்த பெண் என்பதற்காக நான் இதனை கொண்டாடுகிறேன். நாட்டில் பிறந்த அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் வாக்குரிமை அளித்துள்ளது.
மூத்த பாராளுமன்றவாதி சரத்யாதவ் மீண்டும் ஒருமுறை என்னை பார்த்து உட்காரு உட்காரு என்று சொன்னார். இது ஒரு முரண்பாடானதாக நினைக்கிறேன். இது போன்ற அரசியல்வாதிகள் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இடம்பெற்றிருந்தால்..பெண்களின் நிலைமை என்னவாயிருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. இவ்வாறு ஸ்மிருதி ராணி கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பெண்களின் நிறம் குறித்து சரத் யாதவ் பேசியிருந்தார். அதில். தென்னிந்தியப் பெண்கள் கருப்பானவர்களே. ஆனால், அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நடனமாடவும் தெரியும். ஆனால், சிலர் வெள்ளைத் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர் என கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.