அமேதியில் வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறப் போகும் ஸ்மிருதி இரானி
டெல்லி: அமேதி தொகுதியில் ராகுலை வென்று அமைச்சர் ஆகியுள்ள ஸ்மிரிதி இரானி அந்த தொகுதியில் சொந்த வீடு கட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நெடுங்காலமாக நேரு குடும்ப தொகுதியாக இருந்து வந்த அமேதி தொகுதியை ஸ்மிரிதி இராணியிடம் தோற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல். இது ராகுலின் அரசியல் வாழ்வில் பெரும் சறுக்கலாக கருதப்படுகிறது.
கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து அமேதி தொகுதியில் தேர்வாகி வந்த ராகுல் 2009, 2014 ஆகிய தேர்தலில்களில் போட்டியிட்டபோது இவரது வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரபல டி.வி நடிகையாக இருந்த ஸ்மிரிதி இரானி களம் இறக்கப்பட்டார். ஆனால் அப்போது ஸ்மிரிதி தோல்வியை தழுவினார்.
ஆனால் அப்போதே அவரை அழைத்த பாஜக மேலிடம் அடுத்து வரும் தேர்தலில் ராகுலை தோற்கடிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. அதோடு அதற்காக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததோடு மத்திய அமைச்சர் பதவியும் கொடுத்தது. இதன் பின்னர் அமேதி தொகுதியில் கவனம் செலுத்திய ஸ்மிரிதி பெரும்பாலான நாட்கள் அமேதியிலேயே தங்க ஆரம்பித்தார்.
இந்த நேரத்தில் ராகுல் தொகுதி பக்கம் அடிக்கடி வரவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிய ஸ்மிரிதி இதையே தனது பிரச்சாரம் ஆகவும் மாற்றினார். விளைவு ராகுல் தோல்வியை தழுவினார். இப்போது வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானி இந்த தொகுதியை இனி வரும் நாட்களில் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள இப்போதில் இருந்தே முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அதற்காக தொகுதி மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அந்த தொகுதியில் சொந்த வீடு ஒன்றை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்மிரிதி. இதன் மூலம் தன்னை அந்த தொகுதி மக்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார் ஸ்மிரிதி. அமேதி தொகுதியில் சொந்த வீடு கட்டுவது அடுத்து வரும் தேர்தலில் அவருக்கும் பாஜகவுக்கும் பெரும் பலமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். ஆகவே அடுத்த தேர்தலை மனதில் வைத்து இப்போதே அவர் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டார் என்றே கூறலாம்.