அமீர்கானின் ‘சகிப்புத்தன்மையின்மை’ பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை...: ஸ்நாப்டீல் கருத்து
மும்பை: நாட்டின் சகிப்புத்தன்மை தொடர்பாக அமீர்கான் தெரிவித்த கருத்துகளில் தங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என ஸ்நாப்டீல் இணையதள வர்த்தக நிறுவனம் மறுத்துள்ளது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ‘இத்தனை காலம் நாம் இந்தியாவில் வாழ்ந்துவிட்டோம். குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா? என்று முதல் முறையாக என் மனைவி கிரண் என்னிடம் கேட்டார். அந்த அளவிற்கு இங்குள்ள சூழலைக் கண்டு அவர் அச்சப்படுகிறார்' என அவர் அப்போது கூறியிருந்தார்.
எதிர்ப்பும், ஆதரவும்...
அமீர்கானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அமீர்கானின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி மும்பை பாந்திராவில் உள்ள அவருடைய வீட்டின் முன்பாக இந்துசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
ஸ்நாப்டீல்...
இந்த சூழ்நிலையில், ஆமீர்கான் மீதான கோபத்தை, அவர் விளம்பர தூதராக இருக்கும் ஸ்நாப் டீல் நிறுவனம் மீதும் மக்கள் காண்பித்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக செல்போனில் தாங்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருந்த ஸ்நாப்டீல் நிறுவன அப்ளிகேஷனை சுமார் ஒரு லட்சம் பேர் டெலிட் செய்தனர்.
மறுப்பு...
இதனால், பதறிப் போன ஸ்நாப்டீல் நிறுவனம், ‘‘அமீர்கான் தெரிவித்த கருத்துகளில் தங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை'' என்று அறிக்கை வாயிலாக மறுப்புத் தெரிவித்துள்ளது. அந்த நிறுனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஆமிர்கானின் தனிப்பட்ட கருத்து. இதற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை. எந்த வகையிலும் ஆமிர்கானின் பேச்சு எங்களைக் கட்டுப்படுத்தாது.
டிஜிட்டல் இந்தியா கனவு...
ஒரு பெருமைக்குரிய இந்திய நிறுவனமாக எங்களை நாங்கள் கருதுகிறோம். லட்சிய வேட்கை கொண்ட இந்திய இளைஞர்களால் வளர்க்கப்பட்ட நிறுவனம் இது. டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நனவாக்கப் பாடுபடும் நிறுவனம்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.