பனி விலகியது.. திரண்ட பக்தர்கள்.. 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட உலகபுகழ் பெற்ற கேதார்நாத் கோயில்
கேதார்நாத்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காக, 6 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இமயமலை தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த உலகப்புகழ் பெற்ற கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதை அடுத்து, கோயிலில் தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் அட்சயத் திருதியை முதல் அக்டோபர் வரையே திறந்திருக்கும்.
எச்.எல்.தத்துவை அன்று கடுப்பாக்கிய ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்.. ஒரு பிளாஷ்பேக்
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. 6 மாதங்கள் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் மூடப்படும். ஏனெனில் அக்டோபர் மாதத்திலிருந்து இக்கோயில் பனியால் சூழப்பட்டு விடும்.
6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளதால் லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். கோடை காலம் துவங்கியிருந்தாலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது.
பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் சுமார் 3000 பேர் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்று திறக்கப்பட்டுள்ள கேதார்நாத் கோயில் வரும் அக்டோபர் 29ம் தேதி மீண்டும் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.