’நமோ’ ஆப் மூலம் 50 லட்சம் பேரின் தகவல்களைத் திருடிய பாஜக : அபிஷேக் மனு சிங்வி குற்றச்சாட்டு
'நமோ’ ஆப் மூலம் இதுவரை 50 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அபிஷேக் மனு சிங்வி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி : 'நமோ' ஆப் என்கிற ஆண்ட்ராய்ட் செயலி மூலம் இதுவரை 50 லட்சம் பேரின் தகவல்களை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி குற்றஞ்சாட்டி்யுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, இ-மெயில் அனுப்பவும், அதற்கு உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, 'நமோ ஆப்' என்கிற செயலி சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைப்பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்றும், முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் என அனைத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த ஆப்பை தரவிறக்கிய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாஜக திருடியுள்ளதாக ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுவரை 50 லட்சம் பயனாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட தகவல்கள் மட்டுமில்லாமல், ஆதார் தகவல்களும் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், என்.சி.சி மாணவர்கள் அனைவரும் இந்த செயலியை தரவிறக்கம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.