நிற்காமல் சென்ற கார்.. இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போலீசார்!
காரை நிறுத்தாமல் சென்றவரை விரட்டி துப்பாக்கியால் சுட்டனர் போலீசார்.
லக்னோ: சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்றார் என்பதற்காக ஒருவரை விரட்டி விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார்கள் லக்னோ போலீசார்.
லக்னோவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு விவேக் திவாரி என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு 38 வயது. மனைவியும் 2 மகள்களும் இருக்கிறார்கள்.
காரில் நண்பர்கள்
நேற்றிரவு ஒரு தன் நண்பருடன் பார்ட்டிக்கு போய் இருக்கிறார் விவேக். பிறகு இன்று அதிகாலை காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் அவரது நண்பர்களும் இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து, வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு கிடந்தார்கள். விவேக்கின் கார் வேகமாக வரவும் அதை தடுத்து நிறுத்த பார்த்தனர்.
விரட்டிய போலீசார்
ஆனால் விவேக் காரை நிறுத்தவில்லை என்றும் அங்கு நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் மீது காரில் மோத முயன்றதாகவும் கூறப்படுகிறது. பிறகு காரை நிறுத்தாமல் விவேக் இன்னும் வேகமாக சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த போலீசார் 2 பேர் பைக்கில் விவேக்கை விரட்ட தொடங்கினார்கள். கடைசியில் ஒரு வழியாக காரை நெருங்கிவிட்டார்கள்.
துப்பாக்கியால் சுட்டனர்
அப்போது எதிர்பாராதவிதமாக போலீசாரின் பைக் கார் மீது மோதி கீழே விழுந்தது. போலீசாரே பைக்கை கொண்டு போய் காரில் தெரியாமல் மோதிவிட்டனர். இதனால் கீழே விழுந்த போலீசார் சுதாரிப்பதற்குள் விவேக் போலீசாருக்கு பயந்துகொண்டு காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனால் போலீசாரோ, விவேக் ஓடுவதை பார்த்ததும், கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் விவேக் பலத்த காயமடைந்தார்.
கார் ஏற்றி கொல்ல பார்த்தார்
படுகாயமடைந்த திவாரி லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் கொஞ்ச நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து துப்பாக்கியால் சுட்ட போலீசார் கூறும்போது, "எங்களை கார் ஏற்றி விவேக் 3-முறை கொல்ல பார்த்தார். அதனால் எங்களை தற்காத்து கொள்ளவே துப்பாக்கியால் சுட்டோம்" என்றனர்.
பயந்துவிட்டோம்
ஆனால் காரில் இருந்த விவேக்கின் நண்பர்களோ, "இல்லவே இல்லை.. எங்களை மறித்து பணம் பறிக்க போலீசார் முயன்றார்கள். துப்பாக்கியையும் காட்டி மிரட்டினார்கள். நாங்கள் பயந்தே போய்விட்டோம். அதனால் தப்பித்து கொள்ளத்தான் ஓடினோம். இப்படி சுட்டு கொன்றுவிட்டார்கள்" என்கின்றனர்.
விவேக் மனைவி கோரிக்கை
இதனிடையே உயிரிழந்த விவேக் மனைவி கல்பனா, "என் கணவரை சுட போலீசாருக்கு எந்த உரிமையும் கிடையாது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யனாத் என்னை சந்தித்து பேச வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார். சிக்னலில் கார் நிறுத்தவில்லை என்ற காரணத்துக்காக விரட்டிச் சென்று போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.