வேலை இல்லை.. விரக்தியில் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை
ஹைதராபாத்: அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி பின்னர் நாடு திரும்பிய நிலையில் விபத்தில் சிக்கிய ஹைதராபாத் நபர், அதன் பிறகு வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்தார். இது அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்று விட்டது.
அவரது பெயர் கே. ரவிக்குமார். 42 வயதாகும் இவர் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். அந்தக் குடியிருப்பின் 3வது தளத்திலிருந்து கீழே குதித்து ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
சாப்ட்வேர் என்ஜீனியரான ரவிக்குமார் அமெரிக்காவில் பணியாற்றியவர். பின்னர் 2004ல் அங்கிருந்து திரும்பினார். வந்த இடத்தில் சொந்த ஊரில் விபத்தில் சிக்கினார். இதனால் அவரது உடல் நலம் பாதித்தது. வேலைக்குப் போக முடியவில்லை. உடல் நிலை சரியான பின்னர் சரியான வேலையும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.
இவருக்குத் திருமணமாகி விட்டது. குழந்தை இல்லை. மனைவி ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார் ரவிக்குமாரர். நேற்றும் காலையில் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு மனைவி வேலைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் மதியத்திற்கு மேல் ஜன்னல் வழியாக 3வது தளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை.