மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க சாப்ட்வேர் அறிமுகம்
டெல்லி: மாநிலங்களின் கோரிக்கைகள் எந்த கட்டத்திலுள்ளன என்பதை அறிந்துகொள்ள மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மாநிலங்களுடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார மிஷன் போன்றவை முக்கியமானவையாகும். இந்த திட்டங்களுக்கான பெருவாரியான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்வதால் மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருக்கும். ஆனால் மத்திய அரசு உடனடியாக பதில் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
மாநில அரசுகள் மிகவும் வலியுறுத்தும்போது, அவற்றின் கோரிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை கோப்புகளை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதை தவிர்க்க கோப்பு கண்காணிப்பு நடைமுறையை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஒரு சாப்ட்வேர் பொருத்தி தங்களது அனைத்து கோரிக்கைகளின் தற்போதைய நிலவரத்தை, இணையதளம் மூலமாக, மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் இப்போது எந்த நிலையில் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள அனைத்து மாநில ஊரகத்துறை செயலாளர்களுக்கும் கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணித்துக்கொண்டு தங்கள் கோரிக்கை காலதாமதம் ஆனதற்கான காரணத்தையும் மாநில அரசு கேட்க உரிமையுள்ளது.