போலி என்கவுண்ட்டர் வழக்கு: அமித்ஷா விடுதலையை எதிர்த்த சொரபுதீன் ஷேக் சகோதரரின் மனு "திடீர்" வாபஸ்!!
டெல்லி: குஜராத் போலி என்கவுண்ட்டர்கள் வழக்கில் இருந்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ருபாபுதீன் ஷேக் திடீரென வாபஸ் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் போலீசாரால் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட தலைவர்களைப் படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் கூறியது குஜராத் போலீஸ்.
ஆனால் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தி வந்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த சம்பவத்தை போலி என்கவுன்ட்டர் என சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அமித்ஷா கைது
குஜராத் போலீஸின் இந்த போலி என்கவுன்ட்டரை நேரில் பார்த்த துளசி பிரஜாபதியும் 2006-ம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கும், போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இரு என்கவுண்ட்டர்களுக்கும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாதான் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதனால் அமித்ஷாவை சி.பி.ஐ. 2010-ம் ஆண்டு கைது செய்தது. இந்த குற்றச்சாட்டால் அப்போதைய முதல்வர் மோடியின் அமைச்சரவையிலிருந்து அமித் ஷா பதவி விலகவும் நேரிட்டது.
அமித்ஷா விடுதலை- மேல்முறையீடு
இந்த வழக்கு 2012-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. அமித் ஷா, போலீஸ் அதிகாரிகள் என 18 பேர் மீது 2013-ம் ஆண்டு சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. அமித்ஷா விடுதலையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ருபாபுதீன் ஷேக் மேல்முறையீடு செய்திருந்தார்.
திடீர் வாபஸ்
இந்நிலையில் திடீரென மும்பை உயர்நீதிமன்றத்தில், தமக்கும் தம்முடைய வழக்கறிஞருக்கும் தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டுள்ளதால் அமித்ஷாவுக்கு எதிரான மேல்முறையீட்டை வாபஸ் பெறுவதாக ருபாபுதீன் ஷேக் தெரிவித்தார். இதை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெறுமாறு ஏதேனும் நெருக்கடி இருக்கிறதா? என கேட்டு அவர் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய 2 வார கால அவகாசமும் அளித்தார்.
இருப்பினும் தாம் தன்னிச்சையாகத்தான் இம்மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாக ருபாபுதீன் ஷேக் கூறியிருக்கிறார்.
மிரட்டல்கள்
அதே நேரத்தில் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள ருபாபுதீன் ஷேக், எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.. என்னை மிரட்டியவர்கள் யாரென்பதை நீதிமன்றத்தில் சொல்வேன். என்று கூறியுள்ளார். அண்மையில்கூட ஊடகங்களிடம் பேசிய அவர், தமது இந்த சட்ட போராட்டத்துக்கு யாரும் உதவவில்லை; காங்கிரஸ் கட்சி தலைவர்களைக் கூட அணுகிப் பார்த்தேன்; நான் ஒரு தனிமனிதனாக போராடுகிறேன்.. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.