சூரிய கிரகணம் 2019 : திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து - தமிழக கோவில்களில் நடை அடைப்பு
திருப்பதி: சூரிய கிரகணம் நாளை வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது. இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 11 மணி முதல் நாளை டிசம்பர் 26ஆம் தேதி நண்பகல் 13 மணிவரைக்கும் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அதிகாலை முதலே தரிசனம் கிடையாது எனவும் பிற்பகல் வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது பல மணிநேரங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மார்கழி மாதம் பூஜைக்கு செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்க கொள்ளவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பினை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணிக்கு தொடங்கி 26 ஆம் தேதி பிற்பகல் 13 மணிவரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் மூடப்பட உள்ளது. கிரகணத்திற்கு பிறகு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவர்.
இதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு கொன்றையடி சன்னதியில் அபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலய சாமிக்கு அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்பட்டு கோவில் நடை காலை 8 மணிக்கு அடைக்கப்படுகிறது. சூரியகிரகணத்தையொட்டி கோவில் நடை 8 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4 மணிக்கு திறந்து பரிகார பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.