சோலார் மின்தகடு ஊழலை தோண்டும் பினராயி விஜயன்... உம்மன் சாண்டிக்கு எதிராக புதிய விசாரணை குழு!
சோலார் மின்தகடு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது புதிய விசாரணை நடத்தப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் : சோலார் மின்தகடு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிய விசாரணை தொடங்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், சோலார் மின் தகடு ஊழலில் பல கோடி மோசடி நடந்துள்ளது ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் குழுவின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார். . மேலும் அந்த குழுவின் விசாரணையில் உம்மன்சாண்டி, மற்றும் அவரது உதவியாளர்கள் முக்கிய குற்றவாளி சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணனின் நிறுவனத்திற்கு உதவியதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் உள்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று பினராயி தெரிவித்துள்ளார். ஏனெனில் ராதாகிருஷ்ணன் தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி உம்மன் சாண்டி வழக்கில் இருந்த தப்பிக்க உதவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் முடிவு
சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து அதன் பின்னர் கேரள அமைச்சரவையில் உம்மன் சாண்டி மீது புதிய விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விசாரணைக்குழுவைச் சேர்ந்த டிஜிபி ஹேமச்சந்திரன் உள்ளிட்டோரும் உம்மன் சாண்டிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதால் அவர்களையும் விசாரிக்க பினராயி உத்தரவிட்டுள்ளார்.
சரிதா புகாரும் விசாரிக்கப்படுகிறது
புதிய விசாரணைக் குழு சரிதா நாயர் தன்னை பலரும் பாலியல் வன்முறை செய்ததாக கூறியது குறித்தும் விசாரிக்கும் என்று முதல்வர் பினராயி கூறியுள்ளார். ஏனெனில் சரிதா நாயர் சோலார் ஊழல் முறைகேட்டில் இருந்து தப்பிக்க பலர் தன்னிடம் பாலியல் சுகம் அனுபவித்தாக கூறியிருந்தார். எனவே லஞ்சத்திற்கு கைமாறு என்ற ரீதியில் இந்த பாலியல் குற்றம் நடந்ததா என்றும் புதிய விசாரணைக் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் புகார்
இது பினராயி அரசின் திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். உம்மன் சாண்டி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபணம் ஆகாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சோலார் மின்தகடு ஊழல்
உம்மன்சாண்டி உள்ளிட்ட உயர் பதவியில் இருப்போரின் பெயர்களை பயன்படுத்தி வீடுகளுக்கு சோலார் மின்தகடு பொருத்தும் சாதனங்களை அமைத்துத் தருவதாக சரிதா நாயரும் அவருடைய கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் பல கோடி பணத்தை ஏமாற்றினர். உம்மன் சாண்டி, சரிதா நாயர் இடையேயான தொலைபேசி உரையாடல் மீடியாக்களில் வெளியானதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.