சோலர் பேனல் மோசடி திருப்பத்தை ஏற்படுத்துமா சரிதா நாயரின் வாக்குமூலம்?
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயருடன் வி.ஐ.பி.கள் இருந்த சி.டி யால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சரிதா நாயரின் ரகசிய வாக்குமூலத்தை மனுவாக அளிக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளார்.
கேரளாவில் வீடு மற்றும் நிறுவனங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர், அவரது 2வது கணவர் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக, முதல்வர் உம்மன்சாண்டியின் முன்னாள் உதவியாளர் பென்னி ஜோப்பனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
விஐபிக்கள் தொடர்பு
இந்நிலையில் சரிதா நாயரின் இரண்டாவது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மேத்யூ வெள்ளிகிழமையன்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "கேரளாவில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சரிதா நாயருக்கு இருந்த தொடர்பை நிரூபிக்கும் வகையில் ,சிடி.யும், பென்டிரைவும் என்னிடம் உள்ளன, பிஜு ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்தால் அந்த காட்சிகளை வெளியிட தயாராக உள்ளேன்" எனவும் கூறினார். இவ்விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
சரிதா நாயர் ஆஜர்
இந்த நிலையில் ஜெயிலில் இருந்த சரிதாநாயரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிமன்றம் முன்பு கூடி நின்ற செய்தியாளர்கள் சரிதாவிடம், வக்கீல் ஜேக்கப் மாத்யூ தெரிவித்த கருத்துக்கள் பற்றி கேட்டனர். அதற்கு சரிதாநாயர் எந்த பதிலும் கூறவில்லை.
உருளும் தலைகள்
நீதிமன்றத்தில் ஆஜரான அவர், மாஜிஸ்திரேட்டிடம் இந்த வழக்கு தொடர்பாக சில சம்பவங்களை மனம் திறந்து கூற இருப்பதாக தெரிவித்தார். அதற்கு மாஜிஸ்திரேட்டு அவர் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை எழுதி வக்கீல் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் படி கூறினார்.
சரிதா நாயர் வக்கீல் மூலம் தாக்கல் செய்ய இருக்கும் மனுவில் என்ன கூறுவார்? யார் யாரின் தலைகள் உருளும் என்பதே இப்போது கேரளாவில் எதிர்பார்ப்பாக உள்ளது.