சோலார் மோசடி: புது குண்டு போடும் சரிதா நாயர், மறுக்கும் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சோலார் பேனல் மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு இன்று ஆஜரான தொழில் அதிபர் சரிதா நாயர் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.10 கோடி லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்யதான் முகமதுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரிதா நாயரின் குற்றச்சாட்டை உம்மன் சாண்டி மறுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர் என்ன பலன் அடைந்தார் என்பதை தெரிவிக்கட்டும். நிவாரண நிதிக்காக அவர் அளித்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. சரிதாவுக்கு நான் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என்றார்.
உம்மன் சாண்டி கடந்த 25ம் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிதா விசாரணை கமிஷன் முன்பு இன்று கூறுகையில்,
சாண்டியின் முன்னாள் உதவியாளர் ஜிக்குமோன் என்னிடம் ரூ.7 கோடி லஞ்சம் கேட்டார். அதில் சாண்டிக்கான பங்கை டெல்லியில் உள்ள தாமஸ் குருவில்லா என்பவரிடம் அளிக்குமாறு கூறினார். நானும் சாந்தினி சவுக்கில் உள்ள மால் ஒன்றில் வைத்து குருவில்லாவிடம் ரூ. 1.10 கோடி அளித்தேன்.
2012ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நான் விக்யான் பவனில் வைத்து உம்மன் சாண்டியை சந்தித்து பேசினேன். அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததே குருவில்லா தான். எல்லாம் எப்படி உள்ளது என்று சாண்டி கேட்டார். பணம் என்னிடம் உள்ளது என்றேன். அதற்கு அவர் குருவில்லாவை தொடர்பு கொள்ளுமாறு கூறினார் என்றார்.