வேலியே பயிரை மேய்ந்தது.. ஓடும் ரயிலில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்
டெல்லி: ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகருக்கு இயக்கப்படும், ஹவுரா-அம்ரிட்சர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி, தான் புக் செய்திருந்த பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக தெரியாமல், ராணுவத்தினருக்காக புக் செய்யப்பட்ட கோச்சில் ஏறியுள்ளார்.
இதைப்பார்த்த ராணுவத்தினர் சிலர், அந்த சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். சிறுமி பாத்ரூம் சென்றபோது, அங்கு வைத்து இருவர் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம், மதுபூர் ரயில் நிலையத்தில் வைத்து, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, சமூக சேவகர்கள் சிலர் மீட்டு காவல் நிலையம் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சையளித்த பிறகு, அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், மந்தீஷ் திரிபாதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மந்தீஷ் திரிபாதி, சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.