அமர்நாத் யாத்ரீகர்கள் பாதையில் தீவிரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி - 3 பிணையாளிகளும் பத்திரமாக மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது 3 பேரை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். பின்னர் பிணையாளிகளே சமயோசிதமாக செயல்பட்டு மீண்டு விட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 பேரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் பிணையாளிகளே சமயோசிதமாக செயல்பட்டு தீவிரவாதியையும் பிடித்ததோடு தாங்களும் உயிர் தப்பினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அம்மாநில முதல் உமர் அப்துல்லா டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நீண்ட காலத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடந்துள்ளது. இது கவலை தருகிறது. இந்தப் பகுதி தீவிரவாதிகளால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்து வந்தது' என்று கூறியுள்ளார்.