கடத்தப்பட்டதாக கூறும் காங் எம்எல்ஏக்கள் யாரென்றே எனக்கு தெரியாது- பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி
கடத்தப்பட்டதாக கூறும் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூர்: பாஜகவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை யாரென்றே தனக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் மொத்தம் சட்டசபையின் பலம் 222-இல் பெரும்பான்மையை பெற 111 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு இருப்பதோ 104 பேர்தான்.
இன்னும் 7 பேரின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏக்களுக்கு வலை வீசி வருவதாக கூறப்படுகிறது. மாலை வாக்கெடுப்பு என்பதால் இன்று காலை தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களை சோமசேகர ரெட்டி சிறைப்பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஹோட்டலில் இருந்த இரு எம்எல்ஏக்களும் பேரவைக்கு வந்தனர். அவர்களை சோமசேகர ரெட்டி கடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவருக்கு இரு எம்எல்ஏக்களை யாரென்றே தெரியாது என்று சோமசேகர ரெட்டி தெரிவித்துவிட்டார்.