குடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் வருகிறது... அமித் ஷா சூசகம்
ராஞ்சி: குடியுரிமை சட்டத்தால் கொதித்தெழுந்த வட கிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஏழு மாநில மக்களை அமைதிப்படுத்தும் விதமாக குடியுரிமை (திருத்தம்) சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவர தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பின்னர் முதல்முறையாக ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் சனிக்கிழமை பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , வடகிழக்கு மாநிலங்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான சட்ட விதிகளில் "சில மாற்றங்கள்" செய்யப்படலாம் என்று சூசகமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், "கான்ராட் சங்மா (மேகாலயா முதல்வர்) மற்றும் அவரது அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை என்னைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எனக்குத் தெரிவித்தனர்.
மதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை
பிரச்சினைக்கு தீர்வு
எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சித்தேன். சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியபோது, கிறிஸ்துமஸுக்குப் பிறகு என்னைச் சந்திக்கச் சொன்னேன். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவோம், மேகாலயாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன்" என்றார்.
காங்கிரசுக்கு
தன்பாத்தில் நடந்த மற்றொரு பேரணியில் அமித் ஷா பேசுகையில் "நாங்கள் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்தபோது, காங்கிரசுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக, பிற நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொண்ட மக்கள் அகதிகளைப் போல வாழ்ந்து வந்தனர். அவர்கள் குடிமக்களாக மாற வேண்டாமா?
காங்கிரஸ் மீது தாக்கு
நாங்கள் முஸ்லீம் விரோதிகள் என்று காங்கிரஸ் கூறுகிறது. நாங்கள் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தோம், அவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளனர்" என்று காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் அரசியல்
காங்கிரஸ் இந்து-முஸ்லீம் அரசியலில் ஈடுபடுவதாகவும், நக்சலிசத்தை ஊக்குவிப்பதாகவும், மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில் பயங்கரவாதத்தை சமாளிக்கத் தவறியதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். கடந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ததாக குற்றம் சாட்டிய அமித்ஷா, பாஜக அரசோ காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ நீக்கியது, இப்போது ஜம்மு காஷ்மீர் தேசத்தின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது என்றார்.