வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்
டெல்லி: வருமான வரித்துறையின் புதிய முடிவால் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் 50 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
வங்கி நிதி மோசடி குற்றவாளி நிரவ் மோடியின் நகைக் கடையில் நகை வாங்கிய 50 பெரும் பணக்காரர்களின் வருமான வரிக்கணக்கை மறுபடியும் பரிசீலனை செய்ய வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, நிரவ் மோடியின் நகைக் கடையில் நகை வாங்கிய பல பணக்காரர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நகை வாங்குவதற்கு உங்களுக்கு கிடைத்த பணம் எந்த வகையில் வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு வழங்கிய பதிலின் அடிப்படையில் தற்போது விசாரணையை ஆரம்பிக்க உள்ளது வருமான வரித்துறை.
பணம் செலுத்தும் ட்ரிக்ஸ்
மிகுந்த விலை உயர்ந்த நகைகளை வாங்கி விட்டு, அதிலும் குறிப்பாக வைர நகைகளை வாங்கி விட்டு, அதற்கு காசோலை, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றின் மூலம் தனித்தனியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு தனித்தனி பில்லாக பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ரொக்கம் எப்படி
விசாரணையின் போது தாங்கள் ரொக்க பணமாக கொடுத்து நகைகளை வாங்கவில்லை என்று இந்த வாடிக்கையாளர்களில் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் நிரவ் மோடியின் நகைக்கடையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் வருமான வரித்துறையிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இது பொய்யான பதில் என்பது தெரிய வருகிறது.
வருமான வரி
எனவே நகை வாங்கியோர்கள் தாக்கல் செய்த, 2014 மற்றும் 2015ம் ஆண்டு வருமான வரி தாக்கல் முதற்கொண்டு தற்போது வரை உள்ள தகவல்களை வருமான வரித்துறை சேகரித்து வைத்துள்ளது. ரொக்கமாக கொடுத்து இவர்கள் வாங்கிய நகை கணக்கில் வராமல் மறைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துவிட்டதால், இதன் மூலம் சுமார் 50 பெரும் பணக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுவராஜ் இந்தியா, தலைவர் யோகேந்திர யாதவ் உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது இந்த விசாரணையின் ஒரு அங்கம்தானாம்.
வங்கி மோசடி பின்னணி
நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மேகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 13 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகிறது, அப்போதுதான் பல ஆவணங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.