பிசாரிகாவு ஏரியைச் சுத்தப்படுத்தினால் "கோழிக்கோடு பிரியாணி" பரிசு... கலெக்டரின் "சிக்" ஐடியா!
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஏரியைச் சுத்தம் செய்தவர்களுக்கு ‘கோழிக்கோடு பிரியாணி' எனப்படும் ஒரு வகை சாப்பாட்டை பரிசாக வழங்கியுள்ளார் அம்மாவட்ட கலெக்டர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியாளர் பிரசாந்த். இவரது பேஸ்புக் பக்கத்தை சுமார் ஒரு லட்சம் பேர் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், பிரசாந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, குப்பைக்கூளமாகக் காட்சியளிக்கும் பிசாரிகாவு ஏரியை அனைவரும் சேர்ந்து சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்பது தான்.
இவ்வாறு ஏரியைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அனைவருக்கும் பிரியாணி வாங்கித் தரப்படும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
பிரியாணி என்றதும் நம்மூர் லெக் பீஸ் பிரியாணி என நினைத்து விடாதீர்கள். இது கோழிக்கோட்டில் தயாரிக்கப்படும் ஒரு சாப்பாடு. அதனை அவர்கள் பிரியாணி என்றே குறிப்பிடுவார்கள்.
மாவட்ட ஆட்சியாளரின் இந்த அழைப்பை ஏற்று, குடியரசு தினமான ஏற்று பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, 57 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த ஏரியை சுத்தம் செய்தனர்.
பிரசாந்த்தும் தான் அளித்த வாக்குறுதியின் படி ஏரியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சாப்பிட பிரியாணி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த துப்பரவு பணி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பிரசாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏரியை சுத்தப்படுத்தும் பொருட்டு பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு எனது நன்றி. 57,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஏரியை சுத்தப்படுத்துவது சாதாரண காரியம் அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்
பிரசாந்தின் இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் இவ்வாறு குழுக்களாக அமைத்து, மக்கள் தங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்து கொள்ள கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நம்மூர்லயும் இப்டி சொன்னா ஆளாளுக்கு களத்துல இறங்கி கடலையே சுத்தம் செஞ்சுட மாட்டாங்க... ஏன்னா, நம்மூர்லயும் பிரியாணி என்றால் பிரித்து மேய நிறையப் பேர் உள்ளனரே!