கள்ளக்காதல் வழக்கு.. 2வது முறையாக அப்பா சந்திரசூட் கொடுத்த தீர்ப்பை திருத்திய மகன் சந்திரசூட்!
இந்திய நீதித்துறையில் அப்பா கொடுத்த தீர்ப்பை அவரது மகனே இரண்டு முறை திருத்தி வேறு தீர்ப்பு கொடுத்து இருப்பது நடந்தேறி உள்ளது.
டெல்லி: இந்திய நீதித்துறையில் அப்பா கொடுத்த தீர்ப்பை அவரது மகனே இரண்டு முறை திருத்தி வேறு தீர்ப்பு கொடுத்து இருப்பது நடந்தேறி உள்ளது.
நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் இன்று சட்டப்பிரிவு 497க்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் மும்பையில் பிறந்தவர். இவர் தந்தை ஒய்.வி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஒய்.வி சந்திரசூட் இந்தியாவில் அதிக நாட்கள் தலைமை நீதிபதியாக இருந்த பெருமைக்கு உரியவர். இந்த நிலையில் அவரது மகன் நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் 2022ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அப்பா கொடுத்த இரண்டு தீர்ப்புகளை இவர் திருத்தி இருக்கிறார்.
மகனின் தீர்ப்பு என்ன
சட்டப்பிரிவு 497க்கு எதிரான வழக்கில் நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் சட்ட பிரிவு 497க்கு எதிராக தீர்ப்பளித்தார். அவர், இந்த சமுதாயம் பெண்களுக்கு எதிரான பல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகிறது. பெண் ஒரு சிலை போல எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறது. இது எல்லாம் உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லையா. இதுதான் குற்றம். பெண்களின் பாலியல் தேர்வு குற்றம் இல்லை. பெண் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும். யார் யாருடன் வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கலாம், என்றுள்ளார்.
அப்பா கொடுத்த தீர்ப்பு
தந்தை ஒய்.வி சந்திரசூட் இதே வழக்கில் இதற்கு முன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். 1985ல் இந்த சட்டம் கொண்டு வந்த 4 ஆண்டுகளில் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. சௌமித்திரி விஷ்ணு தொடுத்த இந்த வழக்கில், ஒய்.வி சந்திரசூட் இந்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். சட்ட பிரிவு 497 இருந்தால்தான் சமுதாயம் சரியாக இருக்கும் என்று அவர் தீர்ப்பளித்தார். இந்த சட்டம் இல்லையென்றால் சமுதாயம் கெட்டுவிடும் என்றார் அவர். அதை அவரது மகன் தற்போது திருத்தியுள்ளார்.
இதற்கு முன் என்ன
இதேபோல் ஏ.டி.எம் ஜபல்பூர் 1976 என்ற வழக்கில் ஒய்.வி சந்திரசூட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதன்படி எமர்ஜென்சி அமலில் இருக்கும் போது அடிப்படை உரிமைகள் எதுவும் இருக்காது. சட்டம்தான் அடிப்படை உரிமையை வழங்குகிறது. அந்த சட்டமே இல்லை என்றால், அடிப்படை உரிமையே இருக்காது என்று ஒய்.வி சந்திரசூட் கூறினார்.
மகன் திருத்தம்
ஆச்சர்யமாக இதே சட்டத்தை அவரது மகன் நீதிபதி தனஞ்சயா சந்திரசூட் மாற்றி இருக்கிறார். இந்த வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பில் எமெர்ஜென்சி இருந்தாலும் அடிப்படை உரிமைகள் இருக்கும். சட்டம் என்பது நமக்கு அடிப்படை உரிமைகளை அடையாளம் காட்டுகிறதே தவிர அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் வரலாற்றில் இரண்டு முறை அப்பாவின் தீர்ப்பை மகன் திருத்தி எழுதியுள்ளார்.