தாயை கொன்று அவரது ரத்தத்தால் "ஸ்மைலி" வரைந்த கல்நெஞ்சம் கொண்ட மகன்?
ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல் துறை அதிகாரியின் மனைவியை அவரது 21 வயது மகன் கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை அதிகாரியின் மனைவியை கொன்ற அவரது மகன், தாயின் ரத்தத்தால் ஸ்மைலி பேஸ் வரைந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்திராணி முகர்ஜியின் மகளான ஷீனா போரா கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருபவர் தியானேஸ்வர் கானார். இவரது மனைவியின் பெயர் தீபாலி (42). இவர்களது மகன் சித்தாண்ட்.
பாந்த்ராவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்துவரும் கானார், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வர்சோவாவில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார்.
செல்போன் பதில் இல்லை
அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது மனைவி, மகன் ஆகியோரின் செல்போனுக்கு அழைத்தும் பதில் கிடைக்கவில்லை. சிறிது நேரம் காத்திருந்த கானார், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அவர்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றனர்.
குப்பைத் தொட்டி அருகே சாவி
இந்நிலையில் மனைவியும், மகனும் கடைக்கு எங்கேயும் சென்றிருக்கலாம் என்று கானார் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த குப்பைத் தொட்டி அருகே அவரது வீட்டு சாவி கிடப்பதை கண்டு அதை எடுத்து கொண்டு வீட்டுக் கதவை திறந்தார். வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
கழுத்தில் வெட்டுக் காயம்
பின்னர் வகோலா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீபாலியின் கழுத்தில் 4- 5 இடங்களில் குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. தீபாலியின் உடல் அருகே அவரது ரத்தத்தால் ஸ்மைலி பேஸ் வரையப்பட்டு என்னை பிடித்து தூக்கில் போடுங்கள் என்ற வாசகமும் எழுதியிருந்தது. மேலும் மகன் சித்தாண்டின் செல்போனும் தீபாலியின் உடல் அருகே கிடந்தது.
வீட்டிலிருந்த பணம் மாயம்
எனினும் அது லாக் செய்யப்பட்டிருந்ததால் தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் பணம் மாயமானதால் அந்த பணத்தை எடுத்தபோது தாயுக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டு தாயை கொன்று விட்டு சித்தாண்ட் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சித்தாண்ட் தலைமறைவாக உள்ளதால் அவரது நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் சிறிது நாள்களாக அவரது நண்பர்கள், சமூக வலைதளங்களுடனான தொடர்புகளில் இருந்து ஒதுங்கியே இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.