அடக்கொடுமையே! வைரத்துக்காக மாமனார் மாமியாரைக் கடத்திய மருமகன் - வீடியோ
மாமனார், மாமியாரிடம் வைரம் இருப்பதாகக் கூறி மருமகன் அவர்களை தன் நண்பர்களிடம் சொல்லிக் கடத்தியுள்ளார்.
சித்தூர்: வைர நகை இருப்பதாகக் கூறி மாமனார் மாமியாரை நண்பர்கள் மூலம் கடத்திய மருமகன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன், கலாவதி தம்பதி. இவர்களுடைய மகள் ஷில்பாவுக்கும் சேகர் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்கின்றனர். ஷில்பா தற்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தன் மாமனார் மாமியாரிடம் வைர நகைகள் இருப்பதாக தன் நண்பர்களிடம் சேகர் கூறியுள்ளார்.மேலும், அவர்களை கடத்துவதற்கும் திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த 1ஆம் தேதி, சேகரின் நண்பர்கள் அவரின் மாமனார், மாமியாரைக் கடத்தியுள்ளனர். இதையடுத்து ஷில்பா சித்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சித்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்தவர்களை விசாரித்ததில் அது வைரத்துக்காக கடத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் - கலாவதி என்பது தெரியவந்தது.
அவர்களைக் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விச்சாரணை செய்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்குக் காரணமான சேகரை தேடி வருகின்றனர்.