உ.பி.: 14 வயது சிறுமியை கடத்தி சீரழித்த முலாயம் கட்சி தலைவரின் மகன் உள்ளிட்ட 3 பேர்
பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவரின் மகன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 18ம் தேதி இரவு ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் தேக்சந்த் பாலின் மகன் ஓமேந்திர பால், அவரது நண்பர்கள் நரேந்திரா மற்றும் சுரேந்திரா ஆகியோரால் கடத்தப்பட்டார். அவர்கள் சிறுமியை காதர் சவுக் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு கடத்திச் சென்றனர்.
மாந்தோப்பில் வைத்து அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் சுரேந்திராவை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.