ராகுல் தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்- 'மாடல் டெஸ்ட்'?
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பங்கேற்காததால் ராகுல்காந்தி தலைமைதாங்கி கூட்டத்தை நடத்தினார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு காரணமாக இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதனையடுத்து அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தி தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இது காங்கிரசின் தலைவராகப் போகும் ராகுல்காந்திக்கு வைக்கப்படும் "டெஸ்ட்" என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் அதன் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோனியா காந்தியின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவரால் வர இயலவில்லை.
இதனையடுத்து துணைத் தலைவரான ராகுல் காந்தி தலைமையில் இன்றைய காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தன. தற்போதுள்ள சூழ்நிலையில் துணைத் தலைவராக உள்ள ராகுல்காந்தி, தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது சிரமம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
ஏனென்றால், அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், அவை அனைத்தும் முடிந்த பின்னரே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
எனினும், சோனியா காந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி உடனடியாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பேச்சும் அடிபட்டு வந்தன. எப்போது ராகுல்காந்தி தலைவராக தேர்தெடுக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார். இது சோனியா காந்தி இல்லாத நேரங்களில் ராகுல் காந்தி, காரிய கமிட்டி கூட்டத்தில் எப்படி முடிவெடுக்கிறார் என்பதனை தெரிந்து கொள்வதற்கான ஒரு டெஸ்ட் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.