எம்.பி.க்கள் 25 பேர் சஸ்பெண்ட்- ஜனநாயகத்தின் கருப்பு நாள்: சோனியா; 8 கட்சிகள் லோக்சபா புறக்கணிப்பு!!
டெல்லி : லோக்சபாவை நடத்தவிடாமல் சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த நாள் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல், ஆம் ஆத்மி உட்பட 8 கட்சிகள் அறிவித்துள்ளன.
முறைகேட்டில் ஈடுபட்ட ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பயண ஆவணங்கள் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், வியாபம் முறைகேடு காரணமாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பதவி விலகக் கோரியும் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற இரு சபைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சபையை சுமூகமாக நடத்த சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமும் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், லோக்சபா இன்று காலை கூடியதும், சுஷ்மா, வசுந்தரா, சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபை நடவடிக்கைகளை பிற்பகலுக்கு சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார். பிற்பகலில் சபை மீண்டும் கூடியதும், மீண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள், சபையின் மையப்பகுதிக்கு திரண்டு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
அவர்களை அமைதிப்படுத்தும் சபாநாயகரின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த 25 எம்.பி.க்களை அடுத்த 5 அலுவல் நாட்களுக்கு இடை நீக்கம் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
அக்கட்சிக்கு லோக்சபாவில் மொத்தம் 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றதிதற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த நாள் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என விமர்சித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, நாளை முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக 5 நாட்கள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 5 நாட்கள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் 8 கட்சிகள் லோக்சபாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.