1991-ல் எனக்கு பதில் நரசிம்மராவை பிரதமராக்கிய சோனியாவின் சதிகார விசுவாசிகள்- சரத்பவாரின் புது குண்டு
டெல்லி: 1991ஆம் ஆண்டு தம்மை ஓரம்கட்டி நரசிம்மராவை பிரதமராக்கினர் சோனியா காந்தியின் சதிகார விசுவாசிகள் என்று தேசியவாத தலைவர் சரத்பவார் தமது புத்தகத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
75 வயதை எட்டும் சரத்பவாருக்கு டெல்லியில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி "Life on my terms-From the Grassroots and Corridors of Power'" என்ற சரத்பவாரின் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள்:
- 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி மரணத்துக்குப் பின்னர் நரசிம்மராவையே சோனியாவின் விசுவாசிகள் தேர்ந்தெடுத்தனர். இத்தனைக்கும் நரசிம்மராவ் உடல்நலம் குன்றி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
- நான் பிரதமராகிவிட்டால் நீண்டகாலம் அப்பதவியில் நீடித்துவிடுவேன்; இந்திரா குடும்பத்தின் சொல்படி நடக்கமாட்டேன் என சோனியா விசுவாசிகளான தவான், வி. ஜார்ஜ், அர்ஜூன்சிங் கருதியிருக்கலாம்.
- இதனாலேயே என்னை பிரதமராக்குவதற்கு பதிலாக நரசிம்மராவை பிரதமராக்கிவிட்டனர்.
- பொதுவாக சுதந்திரமாக முடிவெடுத்து செயல்படுபவர்களை சோனியா காந்தி விரும்புவதில்லை.
- நரசிம்மராவ் மற்றும் எனக்கு கட்சியில் இருக்கும் ஆதரவு குறித்து வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. நரசிம்மராவ் 35 வாக்குகள் என்னைவிட கூடுதலாக பெற்றார்.
- இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் முதன்மை செயலராக இருந்த அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தி எனக்கு முக்கிய துறைகளைப் பெற்றுத்தந்தார்.
- 1997 -ல் வாஜ்பாய் அரசாங்கம் 1 ஓட்டு வித்தியாசத்தில் பதவி இழந்ததது. அப்போது பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்தால்தான் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும் என்று கூறினேன். அதன்படி கடைசிநேரத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக மாயாவதி வாக்களித்தார்.
இப்படியாக பல்வேறு 'பஞ்சாயத்து'களுடன் பயணிக்கிறது பவாரின் புத்தகம்.
இந்த கோபங்களால்தான் 1999ஆம் ஆண்டு சோனியா காந்தி வெளிநாட்டில் பிறந்தவர்.. வெளிநாட்டு சோனியா காந்தி எப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடியும் என போர்க்கொடி தூக்கி காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் சரத்பவார் என்பது குறிப்பிடத்தக்கது.