நிருபரின் மைக்கை தட்டி விட்ட விவகாரம்... மருமகன் வதேராவிடம் நேரில் "விசாரித்த" சோனியா!
டெல்லி: செய்தியாளர்களின் மைக்கைத் தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய தனது மருமகன் ராபர்ட் வதேராவை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவர் மீது அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது விதிமுறைகளை மீறி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் தன்னிடம் வினா எழுப்பிய செய்தியாளர் மீது ஆத்திரம் காட்டினார் வதேரா. செய்தியாளரின் மைக்கை தட்டி விட்ட வதேரா, அவரை, ‘உனக்கு என்ன பைத்தியமா?' என கோபமாக திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வதேராவின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தனிப்பட்ட ஒருவரை தொடர்ந்து துரத்துவதுடன், தனியார் விருந்தில் அவரை வெறுப்பேற்றும் வகையில் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தனது மருமகன் வதேராவை சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. பிரியங்காவின் இல்லம் அமைந்துள்ள லோதி எஸ்டேட்டுக்கு சென்ற சோனியா காந்தி அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக வதேராவுடன் பேசியதாக தெரிகிறது.