ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு எம்பிக்கள் பலம் இருக்கிறதா? சோனியா காந்தி பதிலால் பாஜக ஷாக்
யார் சொன்னது எங்களுக்கு உறுப்பினர்கள் இல்லையென சோனியா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.
இது தொடர்பாக சோனியா காந்தியிடம், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லும் அளவுக்கு எண்ணிக்கை பலம் இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லையென யார் சொன்னது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தின் முதல் நாளில் தெலுங்குதேசம் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரும் மனுவை லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தது. மனுவை ஏற்றுக்கொண்ட சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்த 10 நாட்கள் வரை அவகாசம் உண்டு என்றும், சீனிவாஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன் மொழிந்தால் 50 எம்பிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மனு மீதான விவாதம் நடத்துவது குறித்து சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
மொத்தம் 543 லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. பாஜக உறுப்பினர்கள் மட்டும் மொத்தம் 272 பேர். கூட்டணி கட்சி உறுப்பினர்களைச் சேர்த்தால் 315 உறுப்பினர்கள். அதனால், பாஜக அரசுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளதா என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சோனியாக காந்தி எங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை பலம் இல்லையென யார் சொன்னது என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ டிவிட்டரில், சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மான மனுவை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறோம். அரசு தன்னுடைய பொறுப்பை ஏற்க வேண்டும். முக்கியமான விவகாரங்களில் தன்னுடைய மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்த கிடைத்த வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.