ம.பி.யை தொடர்ந்து ராஜஸ்தான்? அடுத்த விக்கெட் சச்சின் பைலட்? அசோக் கெலாட்டுக்கு டென்ஷன் சோனியா சம்மன்
ஜெய்ப்பூர்: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் போர்க்கொடியால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு காலாவதியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தும்விட்டது.
எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை அமைக்கலாம் என்கிற நிலைமை உள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவும் காங்கிரஸ் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் பாஜகவில் இணைய இருக்கிறார். இதேபாணியில் ராஜஸ்தான் அரசுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ராஜஸ்தான் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் ஏழாம் பொருத்தம். தற்போது ராஜ்யசபா தேர்தலில் வைர வியாபாரியான அரோரா குடுபத்தைச் சேர்ந்தவருக்கு ராஜ்யசபா சீட் வாய்ப்பு கொடுக்கப்பட்டதை சச்சின் பைல்ட் விரும்பவில்லை. இந்நிலையில் மத்திய பிரதேச அரசியல் குழப்பம் குறித்து சச்சின் பைலட் ஒரு ட்வீட் போட்டிருந்தார். ஏறத்தாழ ராஜஸ்தான் சம்பவங்களைக் குறிப்பிடும் வகையில்தான் சச்சின் பைலட் அப்பதிவில் கூறியிருந்தார். ம.பி. பிரச்சனைக்கு தலைவர்கள் தீர்வு காண வேண்டும். மாநிலத்தில் நிலையான ஆட்சி தேவையானதாக இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
பூர்வோத்திரத்தை புரட்டினால் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவுக்கு தாவியதில் துளிகூட ஆச்சரியமே இல்லை!
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரது பார்வையும் ராஜஸ்தானின் சச்சின் பைலட் பக்கம் திரும்பியுள்ளது. இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.