எந்த கட்சியையும் கண்டு நாங்கள் அச்சப்படவில்லை.. பிரதமரை முழுமையாக ஆதரிக்கிறோம்: சோனியா
கர்நாடக மாநிலம் மாண்டியா லோக்சபா தொகுதியில் அண்மையில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை குத்து ரம்யா வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் எந்த ஒரு கட்சியையும் கண்டு அச்சப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் தாக்குதலைக் கண்டும் அச்சப்படவில்லை. எப்போதும் மக்களுக்கு நன்மை செய்வதையே சிந்தனையாகக் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மன்மோகன்சிங்கை அவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை முழுமையாக ஆதரிக்கிறோம். உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா என பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அனைத்து சாதனைகளையும் படைத்திருக்கிறோம் என்றார்.
சோனியா காந்தி பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து கறுப்புக் கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.