ராகுலுக்கு 'ராகு' காலம்.. காங். தலைவர் சோனியாவின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் சோனியா காந்தி மேலும் ஓராண்டு நீடிப்பார் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சரித்திரம் காணாத தோல்வியைத் தழுவியது. நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டது.
இத்தேர்தல் தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்பதாக சோனியாவும் ராகுலும் அறிவித்தனர். அதன் பின்னர் திடீரென ராகுல் காந்தி 56 நாட்கள் ஏதோ ஒரு நாட்டுக்கு அரசியல் பயிற்சி வகுப்புக்கு சென்றார்.
அதன் பின்னர் அவரது அரசியல் நடவடிக்கைகள் விஸ்வரூபமெடுத்தன. இது சோர்ந்து கிடந்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கின.
Sonia Gandhi given one year extension as Congress President with CWC passing resolution to this effect.
— Press Trust of India (@PTI_News) September 8, 2015
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு காரிய கமிட்டி கூட்டத்தின் போதும் ராகுலை தலைவராக்கப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை அடுத்த ஆண்டு நடத்தவும் அதுவரை தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சிப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவராக ராகுல் தற்போதைக்கு நியமிக்கப்பட வாய்ப்பில்லை. இது அவரது ஆதரவாலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
ராகுலுக்கு ராகு காலம்போல!