எதிர்கட்சியாக உட்காருவோம்- ராகுல்! எப்படியும் ஆட்சி அமைப்போம்- காங். மூத்த தலைவர்கள்!!
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து கொடுத்த நிகழ்ச்சியை புறக்கணித்து காங்கிரஸில் சலசலப்பு இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்; 100 இடங்களுக்கும் குறைவாகத்தான் வெல்லும் என்றுதான் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கூறி வருகின்றன. காங்கிரஸைப் பொறுத்தவரையில் கருத்து கணிப்புகளை நம்பமாட்டோம் என்று அறிவித்திருக்கிறது.
பாஜகவை உட்கார விடக் கூடாது
அதனால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி பாஜகவை ஆட்சியில் அமர இடம் கொடுத்தால் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று அஞ்சுகின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அதன் சித்தாந்தங்களை முழுமையாக நிறைவேற்றும்.. அதை காங்கிரஸ் எதிர்த்து போராடும்போது கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
89-90 போல முடிவெடுங்க
அதானால் 1989-90களைப் போல மாநில கட்சிகள் அதிக இடங்களைப் பெறும் நிலையில் அவற்றை ஆட்சியில் அமர வைக்க காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்பதுதான் பொதுவான காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கை.
எதிர்க்கட்சியாக உட்காருவோம்
ஆனால் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்.. அப்பொழுதுதான் கட்சியை சீரமைக்க முடியும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம். எப்படியும் காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலை வரும்.. அதனால் அங்கு கட்சியை நிர்வாகிகளை முழுமையாக மாற்றிவிட்டு உயிர்ப்பிக்க வேண்டும் என்று ராகுல் பேசி வருகிறாராம்.
கட்சியை அப்புறம் பார்க்கலாம்.. வியூகம் தேவை
அதே நேரத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களோ கட்சி சீரமைப்பை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் முதலில் பாஜக ஆட்சியில் அமருவதைத் தடுக்க வியூகம் வகுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த மோதலின் ஒருபகுதியாகத்தான் நேற்று ராகுல், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கொடுத்த விருந்தில் கால்ந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
வெளிநாடா? வெளியூரா?
ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தாரா? வெளியூரில் இருந்தாரா? என்ற முரண்பட்ட தகவல்களை காங்கிரஸ் தலைவர்களே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டு ராகுல் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ போயிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
வெல்லப் போவது யாரு?
எதிர்கட்சியாக உட்காருவோம் என்ற ராகுலின் முழக்கம் வெல்லப் போகிறதா? எப்படியும் ஆட்சி அமைப்போம் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களின் முயற்சி வெல்லப் போகிறதா? என்பது நாளை தெளிவாகிவிடும்.