பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!
டெல்லி: "பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா' திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.
கடந்த சுதந்திர தின விழாவின்போது 'எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை' பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட பலரும் எம்.பி.க்கள் மாதிரி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விருப்பப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இத் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலுள்ள உருவா என்ற கிராமத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா தத்தெடுத்துள்ளார்.
இதே போல், அமேதி தொகுதியில் உள்ள ஜக்திஷ்பூர் கிராமத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தத்தெடுத்துள்ளார்.