நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்... கைகோர்த்த ராகுல், சோனியா!
எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் விஷயங்களை மத்திய அரசு தட்டிக்கழிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
டெல்லி : விவசாயிகள் பிரச்னை, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, எஸ்சி எஸ்டி சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய அரசு பிடி கொடுக்காத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கியது.இந்தக் கூட்டத் தொடர் முதலே கடும் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக, திமுக எம்.பி.க்கள் இரு சபைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கி வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இவர்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் சபை தொடர்ந்து செயல்படாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்படவே இல்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக லோக்சபா, ராஜ்யசபா தொடர்ந்து 20 நாட்களாக முடங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் வளாகம் அருகே வங்கி முறைக்கேடு, விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம், ஏர் இந்தியாவில் பங்குகள் விலக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.