காங்கிரஸ் தோல்விக்கு நானே பொறுப்பு- ராகுல் காந்தி; மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்- சோனியா
டெல்லி: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாக சோனியா மற்றும் ராகுல் இருவரும் தெரிவித்துள்ளனர்.
9 கட்டங்களாக நடந்த 16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மிகக் குறைந்த இடங்கள் மட்டுமே காங்கிரசிற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் காந்தியுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இத்தேர்தலில் காங்கிரஸ் சந்தித்துள்ள தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்ற ராகுல், இத்தோல்வி குறித்து காங்கிரஸ் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
சோனியா பேசுகையில், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். கட்சிக் கொள்கையின் அடிப்படையிலேயே தேர்தலை சந்தித்தோம். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் தீர்ப்பு முழுக்க முழுக்க எங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. ஆயினும் மக்கள் நலப்பணியை தொடர்ந்து மேற்கொள்வோம். புதிதாக அமைய உள்ள அரசுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய நலனில் புதிய அரசு சமரசம் செய்யாது என நம்புகிறோம் என்றார் சோனியா.
தோல்வியை ஏற்றுக் கொண்ட சோனியா- ராகுல்- வீடியோ