சகிப்புத்தன்மை குறைவு... டெல்லியில் சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகை நோக்கி காங். பேரணி!
டெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரசார் இன்று பேரணி நடத்தினர். இந்த பேரணியின் முடிவில் சகிப்புத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரசார் மனு அளித்தனர்.
நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று திடீரென பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
Various leaders begin #CongressMarch4Unity from Parliament to Rashtrapati Bhavan pic.twitter.com/6tHxf0DLmB
— INC India (@INCIndia) November 3, 2015
அதுவும் 1984 சீக்கியர் கலவரத்துக்காக காங்கிரஸ் வெட்கித் தலைகுனிய வேண்டும்; சகிப்புத்தன்மை பற்றி பேசுவதை அக்கட்சி நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணிநேரத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப் பேரணி முடிவில் நாட்டில் சகிப்புத் தன்மை குறைவால் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து மனு ஒன்றை பிரணாப் முகர்ஜியிடம் சோனியா உள்ளிட்டோர் வழங்கினர்.
சீக்கியர்கள் எதிர்ப்பு
டெல்லியில் இந்த பேரணி நடத்தப்பட்ட போது இதற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் போட்டி பேரணி நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 1984ஆம் ஆண்டு இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கோரி இவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.