ராஜீவ் காந்தி நினைவு தினம்: வீர் பூமியில் சோனியா, ராகுல், பிரியங்கா அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்காவுடன் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24வது நினைவு தினம் இன்று. இதையொட்டி அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள அவரது சமாதியான வீர் பூமியில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா ஆகியோர் தங்கள் தந்தை ராஜீவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவும் மாமனாரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மகேன், பி.சி. சாக்கோ ஆகியோரும் ராஜீவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.