மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!
மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி நாடு திரும்பினார்.
டெல்லி: சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியுடன் டெல்லி திரும்பினார்.
கடந்த சில மாதங்களாக சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சர் கங்காராம் மருத்துவமனையிலும் சோனியா சிகிச்சை பெற்றார். அண்மைக்காலமாக பொது நிகழ்ச்சிகளை சோனியா காந்தி தவிர்த்தே வந்தார்.
அதன் பின்னர் உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக கடந்த எட்டாம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நேற்று மாலை டெல்லி திரும்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.