2004, 2009 தேர்தல் மாதிரி கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும்: சோனியா நம்பிக்கை
டெல்லி: கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு தேர்தல்களைப் போல கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, வாரணாசியில் மோடிக்கு எதிராக நிச்சயமாக காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். யார் வேட்பாளர் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களின் போதும் இதேபோல் கருத்து கணிப்புகள் வெளியாகி பொய்யாகின. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமரை, தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசு மீதான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் புகார்கள் பொய்யென நாங்கள் நிரூபிப்போம் என்றார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல கட்சிகள் ஏற்கவில்லை. தமிழகம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லைதான்.ஆனால். மற்ற மாநிலங்களில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம்.
பாரதிய ஜனதாவும் கூட சில மாநிலங்களில் கூட்டணி அமைக்கவில்லையே.. பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம்போல இம்முறையும் தோல்விதான் ஏற்படும். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டுக்கு கேடு விளைவிப்பவை என்றார்.